புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் இன்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், சரியான நேரத்தில் பணிக்கு வராத 50 சதவீத ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்ததுடன், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். சிலரை வேறு துறைக்கு மாற்றவும் ஆட்சியர் அதிரடி உத்தரவிட்ட சம்பவம் ஊழியர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என சமீபத்திய மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் புகார் வந்தது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அரசு அலுவலங்களை அடிக்கடி ஆய்வு செய்து வருகின்றார்.
அப்படி இன்று காலை புதுச்சேரி நகராட்சி அலுவலகத்திற்கு திடீர் ஆய்வுக்கு சென்ற ஆட்சியர், அலுவலகத்தில் ஊழியர்கள் வருகை பதிவேட்டை எடுத்து பார்த்தபோது 50 சதவீதம் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வராதது அவருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அங்கு இருந்த அதிகாரிகளிடம் “இனி வரும் ஊழியர்கள், வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்கக்கூடாது. உரிய நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்களுக்கு இன்று கட்டாய விடுப்பு அளித்துவிடுங்கள். உரிய நேரத்தில் வராததற்கு விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள்” என உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு ஆட்சியர் ஆய்வுக்கு சென்றார். அங்கு அந்த அலுவலகத்தில் சரியான நேரத்தில் பணிக்கு வராத கண்காணிப்பாளருக்கும் கட்டாய விடுப்பு அளித்து, அவரை வேறு துறைக்கு மாற்றவும் உத்தரவிட்டார்.
இதுபற்றி மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் பேசுகையில், “மக்கள் சேவையில் பணியாற்றும் அதிகாரிகள் உரிய நேரத்தில் பணிக்கு வரவில்லை என்றால் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று துறை தலைவருக்கு அறிவுறுத்தப்படும். இந்த நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் பொருந்தும். பாரபட்சமில்லாத நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.