குற்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் பிரபல ரவுடி படப்பை குணா மீது கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், அடிதடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனிடையே ஸ்ரீபெருமந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் மிரட்டி பணம் வசூலிப்பதை தடுக்க என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி வெள்ளதுரையை தமிழக அரசு நியமித்தது.
இந்நிலையில் காவல்துறையினரால் தேடப்பட்ட ரவுடி படப்பை குணா, என்கவுன்ட்டருக்கு பயந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக அரசு நிலங்களை ஆக்கிரமித்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களையும் மீட்டனர். படப்பை குணாவின் கூட்டாளிகளையும் கைது செய்து நடவடிக்கை தொடர்ந்து வந்தது.
படப்பை குணா சென்னை புழல் சிறையில் உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அறிவுறுத்தலின்படியும் படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News