“திமுக-வினர் வாக்கு கேட்க வந்தால் பெண்களுக்கான ஊக்கத்தொகை 21 மாதத்திற்கும் 21 ஆயிரம் ரூபாய் எங்கே என கேளுங்கள்” என முன்னாள் அமைச்சர் வேலுமணி இடைத்தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வீரப்பன் சத்திரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பரப்புரை மேற்கொண்டார். மேளதாளம் முழங்க ஆரத்தி எடுத்து அவருக்கு அதிமுகவினர் வரவேற்பு ஏற்பாடுகள் செய்தனர்.
அப்போது பரப்புரையில் பேசிய முன்னாள் அமைச்சர் வேலுமணி, “ஈரோடு மாவட்டத்திற்கு திமுக எதுவும் செய்யவில்லை. இங்குள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியைக்கூட செய்து கொடுத்தது எடப்பாடியார் தான். ஆகவே இந்த ஆட்சிக்கு பதிலடி கொடுக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். ஈரோடு மாவட்டத்திற்கு வளர்ச்சியை கொடுத்த புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, எடப்பாடியாருக்காக வாக்களியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
பணத்தை வாங்கிக்கோங்க... ஆனா இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க. இந்த 20 நாளைக்குதான் திமுகவினர் வருவார்கள். அதன் பிறகு ஓடிப்போய்விடுவார்கள். பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் தருகிறேன் என்றார்கள்... 21 மாதம் ஆயிடுச்சு 21 ஆயிரம் கொடுத்துவிட்டு தான் அவர்கள் வர வேண்டும் என கேளுங்கள்!” என மக்களை பார்த்து வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, “எளிமையான வேட்பாளர் தென்னரசுக்கு வாக்களியுங்கள்.
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றிற்கெல்லாம் பதிலடி கொடுக்க மக்களாகிய நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்” என பரப்புரை மேற்கொண்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News