கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மதிவாணன் (35), இவரது மனைவி கௌசல்யா (32). இவர்களின் மகள் சாரா, கௌசல்யாவின் தந்தை துரை (60) கௌசல்யாவின் தாய் தவமணி (55) ஆகிய ஐந்து பேரும் சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ஆவட்டி கிராமம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து முன்னே சென்ற காரின் பின்பக்கம் மோதியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தின் மீது மோதி நொறுங்கியது.
இதில், காரில் பயணம் செய்த மதிவாணன், கௌசல்யா, தவமணி, குழந்தை சாரா ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதியவர் துரை, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து காரில் சிக்கியிருந்த உடல்களை வேப்பூர் தீயணைப்புத் துறையினர் ஒருமணி நேரம் போராடி மீட்டனர்.
இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News