கோபிசெட்டிபாளையம் அருகே இறந்து போன கணவன் மற்றும் தாயார் உடலை யாருக்கும் தெரியபடுத்தாமல், ஒரு வார காலமாக வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கனகாம்பாள் (80 வயது). இவருடைய மகள் சாந்தி (60). சாந்தி, திருமணத்துக்கு பின்னும் கணவர் மோகனசுந்தரம், மகன் சரவணக்குமார் (34), மகள் சசிரேகா ஆகியோருடன் தாய் கனகாம்பாள் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகள் சசிரேகாவிற்கு திருமணமாகி, அவர் மட்டும் காங்கேயத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று குமணன் வீதி பகுதியில் உள்ள சாந்தியின் வீட்டில், அதிக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்று காவல்துறையினர் சாந்தியின் வீட்டின் முன்பு துர்நாற்றம் வீசியதால் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டினுள் சாந்தியின் அம்மா கனகாம்பாள் மற்றும் அவரது கணவர் மோகனசுந்தரம் ஆகிய இரண்டு பேரும் அழகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தொடர்ந்து வீட்டினுள் அழகிய நிலையில் இறந்து கிடந்த இரண்டு பேரின் உடலை மீட்ட காவல்துறையினர், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாததால் தான், வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததாக பரிதாபமாக சாந்தி தெரிவித்துள்ளார். மேலும் கணவர் இறந்து 7 நாட்கள் ஆனதாகவும், அம்மா இறந்து இரண்டு நாட்கள் ஆனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை காவல்துறையினர் தங்கள் சொந்த செலவில் நல்லடக்கம் செய்வதாக தெரிவித்துள்ளனர். பணமில்லை எனக்கூறி பெண்ணொருவர் தன் அம்மாவையும் கணவரையும் அழுகிய நிலையில் வீட்டுக்குள் வைத்திருந்த சம்பவம், அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News