காவிரியில் வெளியேற்றப்படும் அதிக அளவு உபரிநீரினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்களில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, காவிரி - கொள்ளிடம் கரையோர மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்றிரவு சென்னை - எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் வெள்ள நிலைமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
மழை விவரம், காவிரியில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்கள், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஈரோடு மாவட்டம் பவானி - கந்தன்பட்டறை, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், பிச்சாண்டார்கோவில் ஆகிய நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொலைபேசியில் பேசி, உணவு உள்ளிட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பேசிய முதலமைச்சர், “சாப்பாடு எல்லாம் கொடுக்கிறாங்களா.. பாதுகாப்பாக இருங்க.. எல்லாம் இரண்டு நாளில் சரியாகி விடும்” என தைரியும் கொடுத்தார். ஈரோடு, நாமக்கல், திருச்சி மாவட்ட ஆட்சியர்களிடம் தொலைபேசியில் பேசி கள நிலவரத்தைக் கேட்டறிந்த முதலமைச்சர், உரிய நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க: ”தனியாக யாரும் புலன்விசாரணை நடத்தக்கூடாது”-க.குறிச்சி மாணவி விவகாரத்தில் சிபிசிஐடி அறிக்கை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News