தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகள் பிங்க் நிறமாக மாற்றப்பட்டு வருகின்றன. சென்னையில் முதல் கட்டமாக நாளை முதல் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் முதல் கையப்பமாக பெண்களுக்கான இலவச பேருந்து அறிவிப்பை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். அதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் சென்னையில் ஓடக்கூடிய அனைத்து மாநகர பேருந்துகளும் ஒரே வண்ணத்தில் இருப்பதனால் எது இலவச பேருந்து, எது கட்டண பேருந்து என்பதை கண்டறிவதில் சில இடங்களில் வயதானவர்களுக்கு குழப்பம் நீடிக்கிறது. இதனால் நடத்துனருடன் வாக்குவாதம் ஏற்படும் சம்பவங்களும் நடைபெறுகிறது.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு தூரத்தில் வரும்போது அது கட்டணப் பேருந்தா அல்லது இலவச பேருந்தா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மகளிர் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளை பிங்க் நிறத்தில் வண்ணம் பூசி முதற்கட்டமாக 60 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை நாளை சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.
படிப்படியாக அனைத்து இலவச பேருந்துகளுக்கும் இந்த நிறம் பூசுவது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிங்க் நிறத்தில் பெண்கள் கட்டணம் இல்லாமலும், ஆண்கள் வழக்கம்போல கட்டணம் செலுத்தியும் பயணிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News