தமிழக ஆளுநரின் கான்வாயை நோக்கி கொடிகள் மற்றும் கொடி கம்புகளை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி, தமிழக டிஜிபிக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட 89 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆளுநரின் வாகனம் சென்றபோது நடந்த கருப்புக்கொடி போராட்டம் குறித்து ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஷ் பி. சாஸ்திரி தமிழக டிஜிபிக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் சாலையோரம் குழுமியிருந்தவர்கள் கருப்புக்கொடிகளை ஏந்தியிருந்ததாகவும் ஆளுநருக்கு எதிராக முழங்கங்களை எழுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் கான்வாய் சென்றபோது காவல்துறையினரின் பாதுகாப்பை மீறி அவர்கள் முன்னேற முற்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆளுநரின் கான்வாய் மீது கொடிகள், கொடிக்கம்புகள் வீசப்பட்டதாகவும் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு இன்றி ஆளுநர் கான்வாய் கடந்து சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் இந்த செயல் இருந்ததாகவும் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124ன் படி அதாவாது உள்நோக்கத்துடன் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரை தாக்குதல் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஷ் பி.சாஸ்திரி டிஜிபிக்கு அனுப்பி உள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்தவர்கள நேற்றிரவு விடுவிக்கப்பட்டனர். 89 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மீறுதல், சேதத்தை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்: ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையுமில்லை - தமிழக காவல்துறை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News