மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பிக்கள் மற்றும் முன்னாள் எல்.எல்.ஏக்கள் அரசின் சின்னங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள், அதிகாரிகள் தங்களின் வாகனம், லெட்டர்பேடு, விசிட்டிங் கார்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
அரசு விதிகளின்படி, முக்கிய நபர்கள், அதிகாரிகளை தவிர மற்றவர்கள் சின்னங்களை பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள டிஜிபி, சட்டங்கள் மீறப்படும் போது, சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். அரசு சின்னங்களை சாட்சியங்கள் முன்னிலையில் பறிமுதல் செய்யவும் காணொளியாக பதிவு செய்யவும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.