விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, உயிரிழந்தவரின் சடலத்தை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே நரிக்குடி ஒன்றியம் உலக்குடி கிராமத்தில் வைகை அணை திறப்பு மற்றும் கனமழை காரணமாக கிருதுமால் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் உலக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட திருமாணிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாலாயி (75) என்பவர் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார்.
இதையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை உலக்குடி சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்காக கிருதுமால் நதியை கடந்து வரவேண்டிய நிலையில், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் இறந்தவரின் சடலத்தை இடுப்பளவு தண்ணீரில் 30-க்கும் மேற்பட்டோர் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போராடி ஆற்று வெள்ளத்தை கடந்து சடலத்தை கரை சேர்த்தனர்.
இதுபோன்ற மழை காலத்திலும், அணை திறக்கப்படும் சமயத்தில் கிருதுமால் நதியில் வெள்ளம் வரும்போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் பாதிப்படைகிறது. எனவே தமிழக அரசு கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.