விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தென்னை நாரிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோபாலபுரத்தில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் சாலையில் பார்வதி ஓடை அருகே எஸ்.இராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புதிதாக தென்னை நாரிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கியிருக்கிறார். இந்த கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்றிரவு திடீரென தீ எரியத் தொடங்கியதில், தீ மளமளவென்று பரவி அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நார்க் கழிவுகளில் கொழுந்துவிட்டு எரிந்தது.
அந்த தொழிற்சாலையில் பத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தீ பரவியது உணர்ந்த தொழிலாளிகள் தொழிற்சாலைக்கு வெளியில் அலறி அடித்து ஓடி வந்து அவ்வழியாக சென்றவர்களிடம் கூறினர். இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வத்திராயிருப்பு தீயணைப்புதுறையினர் தொழிற்சாலையில் எரிந்துகொண்டிருந்த தீயினை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிய வட மாநிலத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எவ்வித காயமின்றி தப்பினர். மேலும் இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News