நாகூர் தர்காவில் கோலகலமாக நடந்த சந்தனக்கூடு ஊர்வலம்! ஆட்டோவில் சென்று இறங்கிய ஏஆர்.ரஹ்மான்

உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466 ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466 ஆம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

image

இந்நிலையில், கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகை யாஹூசைன் பள்ளி வாசலில் இருந்து துவங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, ஊர்வலத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், நாகை எஸ்பி ஜவஹர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

image

இதையடுத்து நாகப்பட்டினத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்ற சந்தனக் கூட்டின் மீது வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மும்மதத்தினரும் பூக்களை தூவி வழிபட்டனர். இசை நடனத்துக்கு ஏற்றவாறு கோலாட்டம், தாரைதப்பட்டைகள், நையாண்டி மேளம், பேண்டு வாத்தியங்கள் என கோலாகலமாக நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் நடனமாடி இளைஞர்கள் உற்சாகம் அடைந்தனர். சந்தனக்கூடு ஊர்வலம் அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்ஹா வந்தடைந்தது.

image

அப்போது சந்தனக் கூட்டில் இருந்து சந்தனக்குடம் இறக்கப்பட்டு ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏராளமானோர் பங்குகொண்ட இந்நிகழ்ச்சிக்கு, கூட்ட நெரிசல் காரணமாக ஆட்டோவில் பயணித்து தர்காவை சென்றடைந்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

image

கூட்டம் அலைமோதிய நிலையில், வெடி வெடித்து வானவேடிக்கைகள், இசை வாத்தியங்களுடன் கச்சேரிகள், நடனம் என நாகூரே விழாக்கோலம் ஏற்றிருந்தது. இந்நிகழ்வுக்கு நாகை மாவட்ட காவல்துறை சார்பாக 1050 காவலர்கள், 150 ஊர்க்காவல்படை வீரர்கள் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post