கல்லீரல் வீக்கம் நோயால் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கு மருத்ததுவ உதவி கிடைத்துள்ளது?

received medical help

கல்லீரல் வீக்கம் நோயால் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கு புதியதலைமுறை செய்தி எதிரொலியால் மருத்ததுவ உதவி கிடைத்துள்ளது. வறுமையின் காரணமாக மருந்து மாத்திரைகள் வாங்க வழியில்லாமல் இருந்த அந்த ஏழைத் தாயின் கண்ணீரை துடைத்துள்ளது தமிழக அரசு.

பெரம்பலூர் அருகே பூலாம்பாடி யை சேர்ந்த பானுமதி-குமார் தம்பதியருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன. மூத்த குழந்தைக்கு 10 மாதத்திலும், இரண்டாவது குழந்தைக்கு 12 மாதத்திலும் கல்லீரல் வீக்கம் எனும் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. குழந்தைளுக்கு ஏற்பட்ட நோயை தீர்க்க பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், சென்னை என பல்வேறு ஊர்களில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். நோயை தீர்க்க முடியாது; ஆனால் அதன் தாக்கத்தை குறைக்க முடியும் என்றும் அதற்கான மாத்திரைகள் தனியார் மருத்துவமனைகளில் தான் கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறுகிறார் பானுமதி.

received medical help

பார்ப்பது கூலி வேலையாயினும் குழந்தைகளை காப்பது கடமை என கருதிய பானுமதி தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குழந்தைகளுக்கு 5 நாட்களுக்கு ஒருமுறை 600 ரூபாய்க்கு மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார். இதனிடையே உதவியாய் இருந்த கணவர் குமாரும் குடல் இறக்க,நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை பெற்று கூலி வேலைக்கு போகமுடியாமல் சூழ்நிலை ஏற்பட திகைத்துப் போயுள்ளார் பானுமதி. 

அதன்பிறகே கிடைக்கும் கூலியில் குடும்பத்தில் உள்ள நான்கு பேரின் உணவுக்கே போதவில்லை என்ற போது மருந்து, மாத்திரைக்கு வழிதெரியாமல் வலியோடு காலத்தை கடத்துகிறார். மாத்திரை உட்கொள்ளாததால் நிஷா(15), தாரணிகா(6) என்ற பானுமதியின் இரண்டு பெண் குழந்தைகளும் தற்போது அவஸ்தையை சந்திக்க தொடங்கியுள்ளனர். சிறிது உணவு உட்கொண்டாலே ஏற்படும் வயிறு உப்பல், அவ்வப்போது வரும் வலிப்பு நோய் என இரண்டும் அவர்களை பாடாய் படுத்துகிறது. கண்முண்ணே குழந்தைகள் படும் அவஸ்தையை அறிந்தும் அதை வறுமையின் காரணமாக தீர்க்க முடியாமல் தவிக்கும் பானுமதி, அரசு தொடர் சிகிச்சைக்கு உதவ வேண்டுமென கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.


received medical help

இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து அந்த இருசிறுமிகளுக்கும் வருடம் முழுவதும் மாத்திரைகள் இலவசாக வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா. அதனைதொடர்ந்து பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரன் சிறுமிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன் முதற்கட்டமாக இருமாதங்களுக்கு தேவையான மாத்திரைகளையும் வழங்கியுள்ளார்.

மேலும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கியதுடன் சிறுமிகளுக்கு தொடர்ந்து மாத்திரைகள் வழங்க இல்லம் தேடி மருத்துவம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறுமிகள் தாயாருக் அரசுவேலை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கும் வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவ உதவிகள் இலவசமாக கிடைக்க காரணமாக புதியதலைமுறைக்கும் இதுவரை உதவிய டத்தோ பிரகதீஸ்குமாருக்கும், சிறுமிகளின் தாய் பானுமதி பெருநன்றியை தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post