”பாஜக வளரும்போது முதல்வரின் தூக்கம் இன்னும் கெடும்..” - அண்ணாமலை

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாஜக என்ற ஒரு கட்சியே தமிழகத்தில் இல்லை என்று சொன்ன அதே திமுக தலைவர் ஸ்டாலின் தற்பொழுது பாஜகவை எதிர்க்கட்சியாக அவரே நினைக்கிறார்.

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ” திமுக பொதுக்குழுவில் முதல்வர் பேசியது ஒரு மணி நேரத்திற்கு மேல் பாஜகவினை சுற்றி தான் இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாஜக என்ற ஒரு கட்சியே தமிழகத்தில் இல்லை என்று சொன்ன அதே திமுக தலைவர் ஸ்டாலின் தற்பொழுது பாஜகவை எதிர்க்கட்சியாக அவரே நினைக்கிறார்.

முதலமைச்சருக்கு இரண்டு விதமான பயம் வந்துள்ளது. முதலில் அவருடைய கட்சியில் யார் என்ன செய்வார்கள் என்றும், இரண்டாவது பயம் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி.. இவை இரண்டும் சேர்த்து அவரின் தூக்கத்தை கெடுப்பதாக அவரே கூறியுள்ளார். பாஜக வளரும்போது முதல்வரின் தூக்கம் இன்னும் கெடும். அதனால் தான் சொல்கிறேன் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் முதலமைச்சரை தூங்க விடுங்கள்.

திமுகவின் அமைச்சர்களுக்கு ஜாதிவன்மம் இருக்கிறது. அதனால்தான் ஒரு அமைச்சர் ஜாதி பெயரையே வைத்து கூப்பிடுகிறார். அவர்கள் அழைக்கும் தோரணையை பார்த்தாலே தெரியும். இந்தி கற்பதில் தமிழகம் C நிலையில் உள்ளது. இந்தி திணிப்பு என்பதை காங்கிரஸ் திணித்தபோது திமுக 10 ஆண்டுகள் கூட்டணியில் தான் இருந்தது. மத்திய அரசு மூன்று மொழியை படிக்க வேண்டும் வேண்டும் என சொல்லி வருகின்றது. மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இந்தி திணிப்பு இல்லை. நானும் அங்கே தான் படித்துள்ளேன். அங்கு இந்தி திணிப்பு இல்லை. ஒருவேளை இந்தி திணிப்பு என்று மத்திய அரசு செய்தால் நிச்சயம் தமிழக பாஜக அதனை எதிர்க்கும் ” எனப் பேசியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post