
உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டநிலையில், குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவர், தனது குடும்பத்துடன் திருநள்ளாறில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது அந்த கார் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் கிராமம் வந்தபோது காரின் முன் பகுதியில் புகை வந்துள்ளதை கவனித்த ஓட்டுநர் உடனே காரை நிறுத்தி விட்டு பார்த்துள்ளார். அப்போது காரின் முன் பகுதியில் அதிகளவு புகை வருவதை கண்டு காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர்.

இதனைத்தொடர்ந்து சிறிது நேரத்திலேயே கார் தீ பிடிக்கத் தொடங்கியது. மளமளவென தீ பரவி கார் கொழுந்து விட்டு எறிந்தது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த திருநாவலூர் தீயணைப்பு துறை வீரர்கள், தண்ணீரை பீச்சி அடித்து 30 நிமிடங்களுக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்தக் காரில் பயணம் செய்த அனைவரும் சிறு காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தினால் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு விபத்தில் சிக்கிக் கொண்ட வாகனத்தை அப்புறப்படுத்தியப் பிறகு, போக்குவரத்து சரி செய்யப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News