வங்கியில் நகை அடமானம் வைத்து பணத்தை வாங்கி பைக்கில் வைத்து, வீட்டிற்கு சென்று பார்த்தபோது பணம் காணவில்லை என பெண் ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராயப்பன் (49). இவரது மனைவி கீதா (35). இருவரும் இன்று மாலை ராமநத்தத்தில் உள்ள இந்தியன் வங்கியில் விவசாயப் பணிக்கு தனது 7 பவுன் தாலிச் செயினை அடகுவைத்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி, மொபட் வண்டியின் டிக்கியில் வைத்துள்ளார். வங்கியில் இருந்து புறப்பட்டு ராமநத்தம் கடைவீதியில் மொபட்டை நிறுத்திவிட்டு அருகில் உள்ள பேக்கரிக் கடைக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பவும் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு வண்டியில் வைத்த பணத்தை எடுப்பதற்காக வண்டியின் டிக்கியை திறந்து உள்ளார். டிக்கியில் பணம் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கீதா இதுகுறித்து ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாலை ஓரம் உள்ள சிசிடிவி கேமரா மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் இருசக்கர வாகனத்தில் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News