
“தன்னை முதல்வராக்கிய சசிகலாவிற்கு துரோகம் செய்ததை போல, ஓ.பன்னீர்செல்வத்துக்கும் துரோகம் செய்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி” என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பேட்டியளித்துள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டார் வைத்தியலிங்கம். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், “அதிமுகவில் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையிலேயே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை தொண்டர்களால் ஒற்றை வாக்கு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர்களின் பதவி 5 ஆண்டு கால பதவி. அதை பொதுக்குழுவால் நீக்க முடியாது. ஆகவே நேற்று நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பன்னீர்செல்வத்தை கட்டுப்படுத்தாது. அதை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது. தற்பொழுதும் பன்னீர்செல்வம் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவியில் இருக்கின்றார். அவர் தற்போது தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.
ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச் செயலாளர் பதவியே கிடையாது என்பதால் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தன்னை முதலமைச்சர் ஆக்கிய சசிகலா அம்மாவுக்கு துரோகம் செய்ததை போன்று, நான்காண்டு காலம் தனக்கு உறுதுணையாக இருந்த ஓ பன்னீர் செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளர் கட்சி அலுவலகம் சென்ற போது எடப்பாடி ஆதரவாளர்கள் கல் அருவா கம்பு வீசினர். ரவுடிகளை 5 நாளாக அங்கு தங்க வைத்திருந்து அட்டூழியம் செய்துள்ளார் அவர். எனவே எங்களை குறை சொல்ல அவர்களுக்கு தகுதியில்லை" என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News