
யூ-டியூபர் சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டதாக, துரைமுருகன் என்கிற சாட்டை துரைமுருகன் மீது நான்கு வழக்குகளின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி மாதரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், அரசியல் காரணங்களுக்காக தனது கணவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துதாகவும், மேலும் குண்டர் சட்டத்தை மறுபரிசீலனை செய்யக்கோரிய விண்ணப்பத்தை உரிய காலத்திற்குள் பரிசீலிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க 17 நாட்கள் கால தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, துரைமுருகன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவு உத்தரவிட்டனர்.

மேலும் பேச்சுரிமை என்பது இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்றாலும், அதற்கும் ஓர் எல்லை உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் துரைமுருகன் எல்லையை மீறாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறித்தி உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News