
துபாயில் இருந்து மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம் தாமதம் காரணமாக 16 மணி நேரம் காத்திருந்த பயணிகள் நள்ளிரவு புறப்பட்டுச் சென்றனர்.
மதுரையில் இருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் தினமும் நண்பகல் 12:45 மணிக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம். இந்த நிலையில் மதுரையிலிருந்து துபாய் சென்ற ஸ்பைஜெட் விமானம் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் நேற்று காலை 8:45 மணிக்கு மதுரைக்கு திரும்பும். ஆனால், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் மதுரைக்கு வர தாமதம் ஆனது.

இதனால் மதுரையில் இருந்து துபாய் செல்ல நேற்று காலை வருகை தந்த 176 பயணிகளும் மதுரை விமான நிலைய வளாகத்திலேயே காத்திருந்தனர். இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் உள்ள ஸ்பைஸ் ஜெட் ஊழியர்களிடம்; கேட்டதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் முறையான விளக்கம் எதுவும் தரப்படாததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் சில பயணிகள் விமானத்தை ரத்து செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பினர். தொடர்ந்து 126 பயணிகள் மட்டும் துபாய் செல்வதற்காக மதுரை விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஸ்பைட்ஜெட் நிர்வாகம் சார்பில் பயணிகளுக்கான இரவு உணவை வழங்கி சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்றிரவு தூபாயில் இருந்து மதுரைக்கு வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 126 பயணிகளும் நள்ளிரவு 1.48 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் மதுரை விமான நிலையம் பரப்பரப்பாக காணப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News