சென்னையில் நள்ளிரவில் பரவலாக கனமழை பெய்த நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது. அண்ணாநகர், வடபழனி, கோயம்பேடு, சாலிகிராமம், அசோக் நகர், வளசரவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், போரூர், மதுரவாயல், முகப்பேர் மற்றும் புறநகரிலும் மழை பெய்தது. பகல் முழுவதும் வெயில் வாட்டிய நிலையில், இரவில் பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் நாளையும் நாளை மறுநாளும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News