விபத்துகளை குறைக்கும் விதமாக சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் இருசக்கர வாகனங்களில் பின்னே அமர்ந்து பயணிப்பவரும் தலைக்கவசம் அணிவதை கண்காணிக்க உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மே 15 ஆம்தேதி வரை நடந்த இருசக்கர வாகன விபத்துகளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். 841 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறுகிறது போக்குவரத்து காவல்துறை. இதில் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததால் 80 வாகன ஓட்டிகளும், பின்னிருக்கை பயணிகள் 18 பேரும் இறந்ததாக கூறுகிறது புள்ளிவிவரம்.
அதேபோல தலைக்கவசம் அணியாததால் காயம் அடைந்தவர்களில் 714 பேர் வாகன ஓட்டிகளும், 127 பேர் பின்னிருக்கை பயணிகளுமாக இருக்கிறார்கள். இதையடுத்து விபத்துகளை குறைக்கும் விதமாக வரும் 23 ஆம்தேதி திங்கட்கிழமை முதல் சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னிருக்கை நபரும் தலைக்கவசம் அணிவதை கண்காணிக்க சிறப்பு வாகனத் தணிக்கை நடத்த போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News