
புதுக்கோட்டை அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா என்பவரின் மகன் முகம்மது ஆசாத் (19). இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊரான புல்வயலுக்கு வந்த அவர், நேற்று மாலை தனது நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது மேலிருந்து கிணற்றில் குதித்த முகமது ஆசாத், தண்ணீரில் குதித்த சிறிது நேரத்தில் தலையில் கைவைத்தவாறு மிதந்து; மூழ்கியுள்ளார். இதனையடுத்து செய்வதறியாது திகைத்த அவரது நண்பர்கள், இதுகுறித்து சிப்காட் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒருமணி நேர போராட்டத்திற்குப் பின்பு முகமது ஆசாத்தின் உடலை மீட்டனர்.
முகமது ஆசாத் உள்ளிட்ட இரண்டு பேர் மேலிருந்து கிணற்றில் குதிப்பதை மற்றொருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதில், முகமது ஆசாத் தண்ணீரில் குதிக்கும் காட்சிகளும் பின்னர் அவர் மேலே வரமுடியாமல் தண்ணீருக்குள் மூழ்கிய காட்சிகளும் பதிவாகியுள்ளது.

ரம்ஜான் பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News