சிதம்பரம் தனியார் பள்ளியில் வினாத்தாள் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கிறார். தற்கொலைக்கான காரணம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 26). இவர் கடலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். தற்போது 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதால் தேர்வு பாதுகாப்பு பணியில் இவர் இருந்துள்ளார். அதன்படி நேற்றைய தினம் சிதம்பரம் தில்லை நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வினாத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறை முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
கடந்த 6-ம் தேதி முதல் இவர் இந்த பணியில் சுழற்சிமுறையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை காவலர் பெரியசாமி வினாத்தாள் அறையின் பாதுகாப்பு பணியில் இருந்தபோது திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட காவலர் பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க... “என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் உடன் பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் ராஜ்குமார் என்பவரிடம் கேட்டு விசாரணை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி சக்திகணேசன், “பாதுகாப்பு பணியில் இருந்தபோது காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்ததற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. சமீபத்தில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில்தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சிறு விபத்தில் சிக்கி இருக்கிறார். அதன் பிறகு விடுமுறை முடிந்து பணிக்கு வந்தபோதும் விடுமுறை தொடர்ந்து வேண்டுமா என அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
நான் உள்ளூரிலேயே இருப்பதால் பணியில் சேர்ந்து கொள்கிறேன் என கூறிவிட்டு பணியில் சேர்ந்துள்ளார். இறப்பதற்கு முன்பாக செல்போனில் பேசி இருக்கிறார். அதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். திருமணம், காதல் ஆகிய இரண்டு பிரச்னைகள் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம்” என தெரிவித்தார். பள்ளியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News