
வேடசந்தூர் அருகே வீட்டின் முன்பாக கொட்டி வைக்கப்பட்டிருந்த மண்ணால் ஏற்பட்ட தகராறில் ஒருவரின் காதைக் கடித்து துப்பிய மற்றொரு நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூனைகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார் (28) என்பவர் தனது வீட்டின் முன்பாக மண்ணை கொட்டி வைத்துள்ளார். இதன் காரணமாக அவரது வீட்டின் அருகே இருந்த காந்தி ராஜனுக்கும், ஆனந்தகுமாருக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஒருகட்டத்தில் காந்திராஜன் ஆனந்தகுமாரின் வலது பக்க காதை துண்டாகக் கடித்து துப்பியுள்ளார்.

இதனையடுத்து வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த ஆனந்தகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டின் முன்பு மண் கொட்டி வைத்ததால் ஏற்பட்ட தகராறில் ஒருவரின் காதை மற்றொருவர் கடித்துத் துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து எரியோடு காவல்துறையினர் காந்திராஜன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News