சென்னை: கையில் கத்தி, அரிவாளோடு தாக்குதல்: ரயில் நிலையத்தில் அட்டூழியம் செய்த மாணவர்கள்

பெரம்பூரில் ரயில் மீது மாணவர்கள் கற்களை வீசி தாக்கிய நிலையில், அத்திப்பட்டு ரயில் நிலையத்திலும் மாணவர்களின் அட்டூழியம் தொடர்ந்தது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் மார்க்கத்தில் அத்திப்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்த புறநகர் ரயிலில், பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் கத்தி மற்றும் கற்களைக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கியும், ரயில் மீது கற்களை வீசி தாக்கியதாகவும் தெரிகிறது.

image

இதைத்தொடர்ந்து ரயிலில் ஏறிய மாணவர்கள் கத்தி மற்றும் அரிவாளால் சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயிலுக்குள் மாணவர்கள் சிலரை கத்தியால் வெட்டிய நிலையில், அனைவரும் நந்தியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மீஞ்சூர் காவல் துறையினர் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே சுற்றிய மாணவர்கள் 4 பேரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாகவும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேரை பிடித்து விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

இந்த சம்பவத்தில் கத்தியால் வெட்டியதில் 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post