நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். 7 உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குனரும், சட்டம் - ஒழுங்கு டிஜிபியுமான சைலேந்திர பாபு அனைத்து காவல் துறை உயர் அதிகாரிகள், அனைத்து காவல் துறையினருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார். அதில், "21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 489 பேரரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வாக்கு எண்ணிக்கை மற்றும் 12,810 கவுன்சிலர்கள் பதவிப் பிரமாணம் செய்தல் என நகர்ப்புற தேர்தல் அனைத்தும் அசம்பாவிதங்களின்றி சிறப்பாக நடந்து முடிந்தன. சிறிய பிரச்னைகள் எழுந்தபோது, அவற்றை தைரியமாகவும், சமயோஜிதமாகவும் காவல்துறையினர் எதிர்கொண்டுள்ளனர். இதற்காக இரவும் பகலும் அயராது பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்" என்று வாழ்த்து செய்தியில் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து 7 உத்தரவுகளை காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு பிறப்பித்துள்ளார்.
* வன்முறையாளர்கள், கூலிப் படையினர், கொலைக் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் விரைந்து முடித்து விரைவில் தண்டனை பெற்று, அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
* கண்டுபிடிக்கப்படாமல், நீண்ட நாள்களாக நிலுவையிலுள்ள திருட்டு வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்படவேண்டும். திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட வேண்டும்.
* தொடர்ந்து தவறு செய்யும் ரவுடிகளை மாவட்ட வருவாய் அதிகாரி முன் ஆஜர்படுத்தி நல்லொழுக்கப் பத்திரம் பெற வேண்டும். மீறுபவர்கள் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
* குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் புரிந்தவர்களை அன்றாடம் கண்காணிக்கப்படுதல் வேண்டும். இவர்கள் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தடுக்கப்பட வேண்டும்.
* அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவ முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
* வாகன விபத்துகளைக் குறைக்க செயல் திட்டம் வருக்கப்பட வேண்டும்.
* குற்றவாளிகளின் புகைப்படங்களை, காணொலிகளை ஆவணப்படுத்தப்பட
வேண்டும். இவர்களை பிற்காலங்களில் அடையாளம் காண இது உதவியாக இருக்கும்.
இந்த உத்தரவுகளை அனைத்து காவல் துறையினர் பின்பற்ற வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: "மாணவர்களை குறைகூறுவதை விட்டுவிட்டு மீட்புபணியில் அக்கறை காட்டுங்கள்" - முதல்வர் ஸ்டாலின்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News