தரங்கம்பாடி அருகே ஆதரவின்றி சிதிலமடைந்த வீட்டில் வசித்த மூதாட்டிக்கு வீடு அமைத்து கொடுத்து அத்தியாவசிய பொருள்கள் வழங்கி உதவிய ஃபேஸ்புக் நண்பர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட மேட்டுச்சேரியில் மெர்சி என்ற மூதாட்டி மிகவும் சிதிலமடைந்த கூரை கூட இல்லாத வீட்டில் ஆதரவற்று தனிமையில் வசித்து வந்தார். இதனை அறிந்த தரங்கம்பாடி பொதுத்தொழிலாளர் சங்க பொறுப்பாளர் அருண்குமார் மூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்தார்.
இதையடுத்து மூதாட்டியின் நிலை குறித்து தனது ஃபேஸ்புக் நண்பர்களுக்கு தெரிவித்து அவர்கள் மூலம் நிதி திரட்டி சுமார் 40 ஆயிரம் மதிப்பில் கூரை வீடு அமைத்துக் கொடுத்துள்ளார். அதோடு ஒரு மாதத்திர்கு தேவையான அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களையும் இன்று வழங்கி உதவியுள்ளார்கள்.
இளைஞர் அருண்குமாரின் இந்த முயற்சியில் அவரது ஃபேஸ்புக் நண்பர்களான சின்னத்திரை நட்சத்திரம் அறந்தாங்கி நிஷா, சென்னை தொழிலதிபர் கிளாசிக் சுரேஸ், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், ஆசிரியை மினாட்சி உட்பட பல ஃபேஸ்புக் நண்பர்கள் மற்றும் வினாயகர் பாளையம் பொறுப்பாளர்கள் இணைந்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர். ஃபேஸ்புக் நண்பர்களின் இச்செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News