இலங்கை கடற்படையை கண்டித்து வேலை நிறுத்தம் செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 நாட்களுக்குப் பிறகு இன்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 68 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை சிறையில் அடைத்தனர். இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால் கடந்த 11 நாட்களாக கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததையடுத்து மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெற்று 3ம் தேதி கடலுக்குச் செல்வோம் என்று அறிவித்திருந்தனர்.
ஆதன்படி இன்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்ற மீனவர்கள், மீன் பிடிப்பதற்குத் தேவையான வலைகள், ஐஸ்கட்டி, குடிதண்ணீர், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தங்களுடைய படகுகளில் ஏற்றிக்கொண்டு 14 நாட்களுக்குப் பிறகு 500-க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM