”கொக்கு போல இறையைத் தேடி அவ்வப்போது மாற்று இடத்திற்கு செல்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல; அவர்கள் அரசியல் வியாபாரிகள்” என
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை இல்லத் திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசியவர், ”அதிமுக பொதுக்குழுவில் கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழு சர்வ வல்லமை படைத்ததாகும். ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இனி கிளைக்கழக தேர்தல் நடக்கும். அதிமுகவிற்கு ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச் செயலாளர். அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அதனால்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டு கட்சிப் பணிகள் நடக்கிறது. ஜெயலலிதா காலத்தில் எப்படி கட்சி நடந்ததோ அப்படிதான் கட்சி நடந்து வருகிறது. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும். அதற்காக தான் தற்போது கிளை கழக தேர்தல் நடக்கிறது. ஒருங்கிணைப்பாளரும் , இணையும் ஒருங்கிணைப்பாளரும் சிறப்பாக கட்சியை வழி நடத்தி வருகிறார்கள்.
அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. ஜெயலலிதாவிற்கு பிறகு கட்சி இருக்காது என கூறினார்கள். ஆனால், அவரது நல்லாசியுடன் இரட்டை இலை சின்னத்துடன் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. ஒரு கோடியே 44 லட்சம் வாக்குகள் வாங்கி இருக்கிறோம். தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆதரவு தருகிறார்கள். சிலர் வேண்டும் என்றே புரளி கிளப்பி விடுகிறார்கள்.
அதிமுகவில் எடுக்கப்படும் முடிவுகள் ஒருமித்த கருத்தோடு எடுக்கப்படுகிறது. இதனால், எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் அடுத்தடுத்து விவாதங்கள் வரும். ஆனால், ஒருமித்த கருத்து எடுப்பதால், அதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். கட்சி எழுச்சியாக இருக்கிறது. வலிமையாக இருக்கிறது. பலம் வாய்ந்த சக்தியாக அதிமுக இருக்கிறது. யாரோ ஒருவர் கட்சியை விட்டு போகிறார் என்றால், அதனால், அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை. உடலில் அதிமுக ரத்தம் ஓடுபவர்கள் எந்த காலத்திலும் அதிமுக விட்டு போக மாட்டார்கள்.
அதிமுக, தொண்டர்களால் உருவான கட்சி அதிமுக. அதிமுகவின் சொத்து தொண்டர்களும், பொதுமக்களும் தான். தொண்டர்களும், பொதுமக்களும் இருப்பதால் அதிமுகவை அசைக்க முடியாது.
வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். சட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கட்சி வலிமையாக இருக்கிறது. யாரோ சிலர் கட்சி கொடியை பயன்படுத்துகிறார்கள் பொதுச்செயலாளர் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்றால், அவர்கள் தலைவராகிவிட முடியாது” என்று கூறியுள்ளார்.