
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்றுவரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சித் தேர்தல் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும், உற்சாகத்தோடும் பெருந்திரளான தொண்டர்கள் ஆர்வத்தோடும் கலந்துகொண்டு 35 கழக மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலையொட்டி, உளவுத் துறையின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்பைக் காட்டிலும் கூடுதலாக மெருகேற்றிக்கொண்டு, பலமூட்டிக்கொண்டு வீறுகொண்டு எழுகிறது என்ற செய்தியை தாங்கிக்கொள்ள முடியாத, பொறுத்துக்கொள்ள முடியாத திமுக அரசு, அரசியல் வன்மத்தையும், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், லஞ்ச ஒழிப்புத் துறையை தன்னுடைய ஏவல் துறையாக மாற்றி, பி. தங்கமணி, இல்லத்திலும், அவருடைய நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களிலும் சோதனை என்கின்ற பெயரில் மிகப் பெரிய வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இதை நாங்கள் அடிப்படையிலேயே வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி, சி. விஜயபாஸ்கர் போன்ற முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களிலும், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களிலும்; அதே போல், சேலம் புறநகர் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவருமான இளங்கோவன் இல்லத்திலும் நடைபெற்ற சோதனைகளைத் தொடர்ந்து, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தற்போது தங்கமணி இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சோதனையானது அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை.
அண்ணா காலத்தில் இருந்து அரசியல் களமாடிக் கொண்டிருக்கக்கூடிய எத்தனையோ முதுபெரும் தலைவர்கள் திமுக-வில் உள்ளபோது, தன்னுடைய குடும்பம் மட்டும்தான் ஆள வேண்டும்; வாழவேண்டும் என்று அரசியல் செய்து கொண்டிருக்கக்கூடிய திமுக-வில் தற்போது ஒரு மிகப் பெரிய சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அடுத்தபடியாக, உதயநிதிதான் அடுத்த தலைவர் என்பதை முன்னிலைப்படுத்தும் விதமாக, அடுத்தக்கட்ட தலைவர்கள் பேச ஆரம்பித்துள்ள இந்தச் சூழ்நிலையில், அரசியல் விமர்சகர்களும், பத்திரிகை ஊடகச் செய்திகளும், தற்போதைய அரசை ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன் தான் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்ற செய்தியும் பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில், இதையெல்லாம் மடைமாற்ற வேண்டும் என்பதற்காக பழைய தந்திரமாம் திமுக-வின் ஒரே தந்திரமாம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற ஆயுதத்தை தற்போதைய திமுக முதலமைச்சரும் கையில் எடுத்திருக்கிறார்.
கடந்த நான்கரை ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் சந்தித்து, மக்கள் நலன் சார்ந்த அரசாக நல்லாட்சியை முடித்திருக்கிறோம். ஆனால், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கக்கூடிய திமுக அரசு, எதிர் வருகின்ற 17-ஆம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக போர்ப்படைத் தளபதிகளைப் பார்த்து அஞ்சுவதன் வெளிப்பாடு தான் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை. பேசினால் குண்டர் சட்டம், கருத்து தெரிவித்தால் குண்டர் சட்டம்; தீவிரமாகக் களமாடினால் வழக்கு. தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்து, கொள்கைப் பிடிப்போடு இருந்தால் லஞ்ச ஒழிப்பு சோதனை என்று புறவாசல் வழியாகவே பயணம் செய்த திமுக, இந்த நிகழ்வையும் புறவாசல் வழியாகவே கையாண்டு கொண்டிருக்கிறது.
50 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் ஆசி வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய இருபெரும் தலைவர்களும் சந்திக்காக சோதனைகள் அல்ல; சந்திக்காத துரோகங்கள் அல்ல; சந்திக்காத வழக்குகள் அல்ல. அந்த வழியில், அவர்கள் பாசறையில் பயின்ற நாங்களும், எங்களின் கழக உடன்பிறப்புகளும், உங்களுடைய இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சிவிடமாட்டாம். முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடராத வழக்குகளா? எங்களுடைய அம்மா வெற்றிபெறாத வழக்குகளா? அந்த வழியில், தாய்வழி வந்த சொந்தங்களெல்லாம் ஓர்வழி நின்று, நேர்வழி சென்றால், நாளை நமதே என்ற புரட்சித் தலைவரின் வைர வரிகளுக்கு ஒப்பாக, இந்த வழக்குகளை சட்டப்படி சந்தித்து வெற்றிவாகை சூடி, புடம்போட்ட தங்கங்களாக, நெருப்பில் பூத்த மலர்களாக, உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையாக, நீரில் மிதக்கும் மேகங்களாக மீண்டு வருவோம்'' என்று தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News