
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் தாய் மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கோடிப்பதி பகுதியைச் சேர்ந்தவர் மாது. டிரைவரான இவருக்கும் கிருஷ்ணகிரி அருகே உள்ள மஹாராஜாக்கடை பகுதியைச் சேர்ந்த தீபா (25) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு யோகாஸ்ரீ (7) என்ற மகளும் இருந்தார்.

இந்நிலையில் கணவர் மாது மற்றும் தீபா ஆகிய இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தீபா வேலைக்குச் சென்றுவர பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை அடகு வைத்த மாது, அந்த பணத்தை குடியில் செலவிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த தீபா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது குழந்தை யோகாஸ்ரீயுடன் வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் மத்தூர் காவல் நிலையதிற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பிரபாகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இருந்த தாய் மகள் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)