
தாமிரபரணியில் வெள்ளம் ஆற்றில் குளிக்க தடை விதித்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தாமிரபரணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றின் சேர்வலாறு - பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் கடனா அணைப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மருதூர் தடுப்பணையை தாண்டி நேற்று விநாடிக்கு 14200 கனஅடி தண்ணீர் சென்றது.

இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து இன்று வினாடிக்கு 29 ஆயிரம் கன அடி தண்ணீர் வருவதால் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கும், நீந்துவதற்கும், மீன்பிடிப்பதற்கும், பார்ப்பதற்கும் பொதுமக்கள் கூட வேண்டாம் எனவும், தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News