மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து 1,000 கன அடியில் இருந்து 2,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி, அதன் முழு கொள்ளளவான 23.3 அடியை நேற்று எட்டி நிரம்பியது. இன்று 24 அடியாக உள்ளது. நேற்று ஏரிக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று வினாடிக்கு 2,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது ஏரியில் 720 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வரும் உபரி நீர் அனைத்தும் ஏரியில் உள்ள தானியங்கி ஷட்டர் மற்றும் கலங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேறும் உபரி நீர் கிளியாறு வழியாக பாய்ந்தோடுகிறது.

நேற்று இரவு முதல் இப்பகுதியில் மழை இல்லை என்றாலும் நீர்வரத்து பகுதிகளான திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக கிளியாறு மற்றும் உத்திரமேரூர் மதகு வழியாக நீர்வரத்து உயர்ந்து கொண்டே உள்ளது. அதனால் ஏரிக்கு வரும் நீர்வரத்து மேலும் உயர வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிகப்படியான நீர் வந்தால் அவை அனைத்தும் கிளியாற்றில் அவசரகால ஷட்டர் மூலம் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. கிளியாற்றங்கரையோர மக்களுக்கு ஏற்கனவே இரண்டு தினங்களுக்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாய சூழல் நேர்ந்தால் கரையோர வாழ் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வசதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News