குன்றி மலை பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள குன்றி மலை கிராமத்தைச் சேர்ந்த மசனன் என்பவரின் மனைவி லில்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் லில்லிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடம்பூரில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அரப்புலிசாமி, மருத்துவ உதவியாளர் விஜய் ஆகியோர் கர்ப்பிணி லில்லியை ஏற்றிக்கொண்டு கடம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கடம்பூர் அருகே மலை பாதையிலேயே லில்லிக்கு வலி அதிகமானதால் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. இதில், லில்லிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து குழந்தையுடன் லில்லியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாய் சேயை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.
யானைகள் நடமாட்டம் உள்ள மலைப்பாதையில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் விஜய், ஓட்டுநர் அரப்புலிசாமி ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News