
சென்னை, அம்பத்தூரில் மகன்கள், மகளுக்கு சுமையாக இருப்பதாக நினைத்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் பானு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ்மேரி (72). இவரது கணவர் சேவியர் இறந்துவிட்ட நிலையில், இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதற்கிடையில், ரோஸ்மேரி தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூட்டு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பின்னர், வீட்டில் இருந்து ஓய்வெடுத்து வந்த இவருக்கு, மகன்கள் நாள்தோறும் மூன்று வேளையும் சாப்பாடு கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில், ரோஸ்மேரி தனது மகளிடம், நான் எல்லோருக்கும் சுமையாக இருக்கிறேன் என கடந்த சில தினங்களாக அழுது புலம்பியுள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் ரோஸ்மேரி தனது வீட்டுக் கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டு மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார்.
இவரது வீட்டு ஜன்னல் வழியாக புகை வருவதை கண்ட பக்கத்து வீட்டில் வசிக்கும் ரஞ்சித் என்பவர் ரோஸ்மேரியின் உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பிறகு, விரைந்து வந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு ரோஸ்மேரி உடல் கருகி இறந்து கிடந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அம்பத்தூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News