
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் உறங்கியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள். மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட ரீதியில் துறைவாரியாக முக்கிய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய குறைகளையும் கோரிக்கைகளையும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்கள். மாவட்ட ஆட்சியரும் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளை அதே இடத்தில் அந்த குறை மற்றும் கோரிக்கைகளை எடுத்துரைத்து சரி செய்ய சொல்லி சொன்னார். இப்படிக் கூட்டம் பரபரப்பான சூழ்நிலையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், விவசாயி ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது மற்றொரு விவசாயி எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று குறுக்கே குறுக்கே பேசினார்.
அப்போது குறுக்கிட்ட மாவட்ட ஆட்சியர், தங்களுக்கு வாய்ப்பு கண்டிப்பாக வழங்கப்படும், அவர் பேசியதும் நீங்கள் பேசுங்கள் என்று தெரிவித்தார். இந்நிலையில், அங்கு வந்திருந்த அதிகாரிகள் சிலர் உறங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் தங்கள் அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இது அங்கிருந்த விவசாயிகளுக்கு வேதனையை அடையச்செய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு கூட்டம் கூடி உள்ள நிலையில் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை சொல்லக்கூடிய வேலையில் அதிகாரிகள் அதனை கவனிக்காமல் தொலைபேசியை கவனித்துக் கொண்டிருந்தது, விளையாடிக்கொண்டிருந்தது அவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News