
ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகள் மற்றும் பிற பிராந்தியங்களில் உள்ள குழந்தைகளுக்கு உலகின் முதல் மலேரியா தடுப்பூசி 'மாஸ்க்ரிக்ஸ்' ஸை செலுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் சுமார் 4 லட்சம் பேரைக் கொல்லும் கொசுக்களால் பரவும் நோயான மலேரியாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்க 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டது. GlaxoSmithKline Plc மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை, சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் பிற பகுதிகளில் மிதமானது முதல் அதிக பரவுதல் ஆபத்து உள்ள குழந்தைகளுக்குப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
தடுப்பூசி தொடர்பான இந்த ஆய்வில் நான்கு டோஸ் செலுத்தப்பட்ட 10 மலேரியா நோயாளிகளில் நான்கு பேரை மட்டுமே இந்த தடுப்பூசி பாதுகாக்கிறது. ஆனால் தடுப்பூசி மற்ற நடவடிக்கைகளுடன் சேர்ந்து நூறாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் " இத்தடுப்பூசி மலேரியாவை உருவாக்கும் கொசுக்களுக்கு எதிரான போரில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இத்தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவது ஒரு வரலாற்று தருணம்" என்று கூறினார்.
வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக ஏற்கனவே பல தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், கொசு போன்ற ஒட்டுண்ணிக்கு எதிரான தடுப்பூசியை பரவலாகப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்தது இதுவே முதல் முறை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News