
இல்லாத கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் கோயில்களுக்குள் அனுமதி மறுக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோயில்களில் வார இறுதியில் 3 நாட்கள் பக்தர்களுக்கு தடை விதித்த உத்தரவை திரும்பப் பெறக்கோரியும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்காக கோயில்களை திறக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற 12 கோயில்களின் முன் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் முன்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “இல்லாத கொரோனாவை காட்டி, கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. தியேட்டர் சென்று படம் பார்க்க உதயநிதி தயாரிப்பு நிறுவனம் சொல்கிறது. தியேட்டரில் மட்டும் கொரோனா பரவாதா? திமுக-வின் சித்தாந்தத்தை எங்களது பூஜை அறைக்கும் கோயில்களுக்கும் கொண்டு வராதீர்கள்” என்றார். மேலும், “மதத்தை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை” என்றும் கூறினார் அவர்.
சென்னையில் பாஜக மகளிர் அணியினர் கைகளில் தீச்சட்டி ஏந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அனைத்து நாட்களிலும் கோயில்களில் பக்தர்களை அனுமதிக்கக் கோரி, தஞ்சை பெரியகோயில் முன்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போல பல்வேறு மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோயில்களின் முன்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News