
எம்.ஜி.ஆரை துரோகி என விமர்சித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு எதிராக அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28ம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன்இ அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரை நம்பிக்கை துரோகி என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் துரைமுருகனுக்கு நாவடக்கம் வேண்டும் என ஈபிஎஸ், ஒபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். துரைமுருகனின் இந்த பேச்சை கண்டிக்கும் வகையில் அதிமுக சார்பில் மதுரை மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டியில் துப்பாக்கி குண்டை தொண்டையில் தாங்கி இரத்தம் சிந்தி திமுகவை அரியணையில் அமர்த்தியவர் எம்ஜிஆர். அண்ணாவின் மறைவிற்கு பின் கருணாநிதியை முதல்வராக்கியவர், கடனில் இருந்த கருணாநிதி குடும்பத்திற்கு சம்பளம் வாங்காமல் எங்கள் தங்கம் படத்தில் நடித்து கொடுத்தவர்,
துரை முருகனை தன் சொந்த செலவில் எம்.ஏ.பி.எல் படிக்க வைத்தவர், ரத்தக்கொதிப்பால் சட்டமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த துரைமுருகனை மடியில் கிடத்தி முதலுதவி செய்து காப்பாற்றியவர் என வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றத்தினர் ஒட்டியுள்ளனர். இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News