
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோயிலில் தாலி கட்டிய புதுமண தம்பதிகள் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
சென்னை போரூர் காரம்பாக்கம் பகுதியில் முடித்திருத்தம் செய்யும் கடை நடத்தி வருபவர் ஆனந்த் (29). இவர், அதே பகுதியில் உள்ள பார்மஸியில் பணியாற்றும் தரணி (23) என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆனந்த், மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும் முடி திருத்தும் வேலை செய்வதாலும் பெண்ணின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதுகுறித்து பெண்ணின் வீட்டாரிடம் பலமுறை பேசியும் பெண்ணின் வீட்டில் ஒப்புக் கொள்ளாததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் திருமணம் செய்த கையோடு எங்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதைடுத்து வளசரவாக்கம் காவல் துறையினர் பெண்ணின் வீட்டாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பெண் வீட்டார் சார்பில் தம்பதிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News