
அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க வேண்டும். சசிகலா அல்லது ஒ.பி.எஸ் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக வேண்டும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் மாநில முன்னாள் செயலாளர் ‘பெங்களூர்’ புகழேந்தி பேசியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் மாநில முன்னாள் செயலாளர் புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்ற நுழைவுவாயிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக சரிவை நோக்கி சென்றுகொண்டிருப்பதால் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் விரைவில் சரியான முடிவொன்றை எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிய போது நல்லவராக இருந்த சசிகலா இப்போது அவருக்கு கெட்டவராக தெரிகிறார். முதலில் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்கி சசிகலா அல்லது ஓபிஎஸ் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக பொறுப்பேற்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்க்கு எதிராக முனுசாமி போன்றவர்கள கருத்து கூறுவது ஏற்புடையதல்ல” என்று கூறினார்.
தொடர்புடைய செய்தி: சசிகலா விவகாரம் - ஓ.பி.எஸ்., & இ.பி.எஸ் இடையே முரண்பாடு ஏன்? : செல்லூர் ராஜூ விளக்கம்

தொடர்ந்து திமுக ஆட்சி குறித்து பேசுகையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் மருது சகோதரர்களுக்கு சிலை எழுப்பப்படும் என அறிவித்துள்ளது மற்றும் முதல்வரின் பிற செயல்பாடுகளை மனதார பாராட்ட நினைக்கிறேன்” என்றார். பின்னர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயரை வைப்பதாக அறிவித்தார். ஆனால் அதை செயல்படுத்தவில்லை. இதனால் அதிமுக மீது தென்மாவட்ட மக்கள் அதிருப்தியில் உள்ளனர். திமுக அரசாவது, மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயரை வைக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News