துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 252 ரன்கள் இலக்கை இந்திய அணி துரத்திய நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா 76 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். இறுதிப் போட்டிக்கு பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா கூறியதாவது:
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறப்போவது இல்லை. தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம். எதிர்கால திட்டங்கள் எதுவும் இல்லை. எது நடக்கிறதோ அது நடந்து கொண்டே இருக்கும். இறுதிப் போட்டியில் நான் வித்தியாசமாக எதையும் செய்யவில்லை. கடந்த 4 ஆட்டங்களில் செய்ததையே செய்தேன். பவர் பிளேயில் ரன்கள் எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன், ஏனென்றால் 10 ஓவர்களுக்குப் பிறகு, பீல்டிங் விரிவடைந்து சுழற்பந்து வீச்சாளர்கள் வரும்போது ரன்கள் சேர்ப்பது மிகவும் கடினமாகிவிடும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்