வடக்கில் இருந்து வரும் மாற்று சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக்கூடாது என திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி 39ஆவது வார்டு ராஜாஜி நகரில், திமுகவில் இணைந்த 214 உறுப்பினர்களுக்கு திமுக துணைப்பொது செயலாளர் கனிமொழி, உறுப்பினர் கார்டு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வடக்கில் இருந்து வரும் மாற்று சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக் கூடாது. அந்த முதன்மை காரணத்திற்காகவே கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு திமுகவுக்கு பிரகாசமாக உள்ளது. எதிர்க்கட்சியினர் நிச்சயம் டெபாசிட் இழப்பார்கள். ஈரோடு 39ஆவது வார்டில் 214 பேர் திமுகவில் இணைந்துள்ளனர்.
வெற்றியை உறுதி செய்யவே, அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சேகர் பாபு, முத்துசாமி, சக்கரபாணி, பொன்முடி ஆகியோர் இங்கே மக்களை சந்தித்து வாக்கு சேகரித்துள்ளனர். திராவிட முன்னேற்ற கழகம் பெறப்போகும் மிகப்பெரிய வெற்றியானது, தமிழகத்திற்கு எதிரான சக்திகளுக்கும், துரோகிகளுக்கும் பெரிய இடியாக இருக்கும்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து ஐந்து அமைச்சர்களுடன் உறுப்பினர் சேர்க்கை விழாவில் பங்கேற்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News