
காதல் தம்பதியரை பிரித்து காதலி கடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில், காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த கிருத்திகாவை 3 நாட்களுக்கு பிறகு இன்று செங்கோட்டை நீதிமன்ற நீதித்துறை நடுவர் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.
தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே உள்ள கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த வினித் - கிருத்திகா காதல் தம்பதியரை பிரித்து, கிருத்திகா கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது ஆஜரான கிருத்திகாவை, 2 நாட்கள் தென்காசி அருகே நன்னாகரம் பகுதியில் உள்ள காப்பகத்தில் வைத்து மனநல ஆலோசனை வழங்கி 2 நாட்களுக்குப் பிறகு ஒப்புதல் வாக்குமூலம் பெற உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த நிலையில், தற்போது 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்று மதியம் 1 மணிக்கு நீதித்துறை நடுவர் சுனில்ராஜா முன்பு கிருத்திகாவை, சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் தலைமையிலான போலீசார் ஆஜர் படுத்தினர். இதையடுத்து நீதிமன்ற அறையில் வைத்து கிருத்திகாவிடம் நீதித்துறை நடுவர் சுனில்ராஜா ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றார். சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ரகசிய வாக்குமூலத்தின் போது கிருத்திகா தனது பல்வேறு கருத்துகளை நீதித்துறை நடுவர் முன்பு சொன்னதாக கூறப்படுகிறது.

ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு முன்பாக நீதிமன்றத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டு பாதுகாப்புக்காக சென்ற போலீசார் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, நீதித்துறை நடுவர் கிருத்திகாவிடம் பெற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வருகின்ற திங்கட்கிழமை அன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News