திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தாவின் கைலாசா ஆன்மீக தூதரகத்தில், கோடி ருத்ராட்சங்களை கொண்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் தேர் போலவே தயாராகி வருகிறது. நித்யானந்தா பிறந்தநாளில் அனுமதிபெற்று கிரிவலப்பாதையில் தேரை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களுரு பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சுவாமி நித்யானந்தா, தனித்தீவு ஒன்றை வாங்கி கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கி அதை இந்துக்களின் புனித பூமியாக அறிவித்திருக்கிறார். இதை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.
நித்யானந்தர் அவதரித்த திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் இருந்த அவரது ஆசிரமம், கைலாசாவின் ஆன்மீக தூதரகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு தினமும் 3 வேலையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பவுர்ணமி நாட்களில் 50 ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பெங்களுரு பிடதியில் இருந்த தேர்கள், திருவண்ணாமலை கைலாசா ஆன்மீக தூதரகத்திற்கு கனரக லாரி மூலம் கொண்டு வரப்பட்டன. மொத்தம் 3 தேர்கள் எடுத்து வரப்பட்டுள்ளது.
அதில் 2 தேர்கள் திருவாரூர் ஆழித்தேர் போன்ற வடிவமைப்பிலும், மற்றொரு தேர் திருவண்ணாமலை அண்ணாமலையார் தேர் போன்றும் காட்சியளிக்கின்றன. அந்தத் தேர்களில் மேற்கூரை முழுவதும் கோடி ருத்ராட்சங்கள் பதிக்கப்பட்டு திருவண்ணாமலை தேராக தயாராகி வருகிறது. இந்த மூன்று தேர்களின் உயரம் சரியாக 35 அடி உயரத்தில் உள்ளது. தேரின் அடிப்பிடம் சுமார் 13 அடி உயரம் உள்ளது. பரமசிவன், பார்வதிதேவி மற்றும் நித்யானந்தர் சிலைகளுடன் இந்த தேர்கள் மகாசிவராத்திரி அன்று பக்தர்களுக்கு காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி நித்யானந்தரின் அவதார திருநாளில் அனுமதி பெற்று கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் ஆசிரம வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் திருவண்ணாமலை கைலாசா ஆன்மீக தூதரகத்தில் இந்துக்கள் பயன்படுத்திய பராம்பரிய பொருட்கள், பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News