சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்காக பக்தர்கள் கூடும் "வியூ பாயின்ட்"களில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுக்குப் பின் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் டாக்டர் திவ்யா எஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் இன்று மகர சங்கரம பூஜையும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. இந்நிலையில் மகரஜோதியை பக்தர்கள் தரிசிக்கும் வியூ பாயின்ட்களில், பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள இறுதிகட்ட பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ்.ஜயர், மாவட்ட எஸ்.பி. ஸ்வப்னில் மதுக்கூர் மகாஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர்.
அதில் குறிப்பாக முக்கிய வியூ பாயிண்ட் இடங்களான பஞ்சிப்பாரா, இலவுங்கல், அய்யன்மாலா, நெல்லிமலை, கெக்கரா ஆகிய இடங்களை பார்வையிட்டனர். மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ், அனைத்து இடங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக தடுப்புகள், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆய்விற்கு பின் பேசிய மாவட்ட ஆட்சியர், மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பி வரும் ஐயப்ப பக்தர்கள் அவசரம் தவிர்த்து மெதுவாக மலையிறங்கவும், அதிகாரிகள் கூறும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News