நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்

நடிகர் வடிவேலு தாயார் மதுரையில் காலமானார். தமிழ்நாடு முதல்வர், அரசியல் பிரமுகர்கள், திரைப்படப் பிரபலங்கள் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.

நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா உடல்நலக்குறைவால் காலமானார். இவரது தந்தை நட்ராஜ் சிறுவயதிலேயே இறந்துவிட்டார்.  தமிழ் சினிமாவின் பல்வேறு உயரங்களை எட்டினாலும், அவரின் குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர். இவரது தாய் சரோஜினிக்கு 87 வயதாகிறது. வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவின் காரணமாக சரோஜினி அவர்கள் நேற்று இரவு காலமானார். இவரது மரணம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இரவு 8 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

image

நடிகர் வடிவேல் பேசும் போது, தாய் சரோஜினி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உடல்நிலை குறைவு காரணமாக திடீரென காலமானதாக தெரிவித்துள்ளார். தனது தாய் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், பா.ம.க. ஜி.கே.மணி உள்ளிட்ட அரசியல் கட்சித்  தலைவர்கள், திரைப் பிரபலங்கள் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்து வருகின்றனர் என்றார்.

image

வடிவேலுவுக்கு 5 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர். தற்போது வடிவேலுவின் தாயாருக்கு, அவரது உறவினர்கள் தொடர்ந்து வீட்டிற்கு வருகை தந்து  சரோஜினிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர் யாருக்கும் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்று பொங்கல் பண்டிகையையொட்டி நல்லபடியாக மாடு, ஆடுடன் கொண்டாடிவிட்டு தற்பொழுது மறைந்திருக்கிறார் என சோகத்துடன் வடிவேலு தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post