இளைஞர் ஒருவர் முடி மாற்றும் சிகிச்சை செய்து செப்சிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம்

sepsis after hair transplant treatment

டெல்லியில்  30 வயதான இளைஞர் ஒருவர் முடி மாற்றும் சிகிச்சை செய்து கொண்டதால் செப்சிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 30 வயதான ஆதர் ரஷீத் என்பவருக்கு தலையில் முடி கொட்டவே, வழுக்கை தலை தன் அழகை குறைப்பதாக கருதிய அவர், கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள ஒரு கிளினிக்கின் விளம்பரத்தை பார்த்து அங்கு சென்றார். அங்குள்ளவர்கள்,  ஆதர் ரஷீத்திடம் பேசி, 'உங்களுக்கு தலையில் ஹேர் டிரான்ஸ்பிளான்ட் சிகிச்சை முறையில் முடியை நட்டு பழையபடி மாற்றி விடுகிறோம்' என்று அங்குள்ளவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதன்படி அவர் அங்கு முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

sepsis after hair transplant treatment

முடி மாற்றும் சிகிச்சை முடிந்த சிறிது நாளிலே ஆதர் ரஷீத்துக்கு செப்சிஸ் எனப்படும் பாக்டீரியா கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தலையில் வீக்கம் பரவத் தொடங்கி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்துள்ளார். முதலில் ரஷீத்தின் சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டது என்றும் பிறகு உடலிலுள்ள இதர உறுப்புகளும் செயலிழந்தன என்றும் அவரின் தாயார் கூறுகிறார். ஒருகட்டத்தில் ரஷீத்தின்  உடல்நிலை மிக மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து  ரஷீத்தின் பெற்றோர், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த கிளினிக் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்கள். ரஷீத்துக்கு முடிமாற்று அறுவைச் சிகிச்சை அளித்த இருவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

தனது மகன் ஆதர் ரஷீத் மிகவும் கொடுமையான முறையில் மரணம் அடைந்ததாக வேதனை தெரிவித்த ரஷீடின் தாயார், தமது மகனை இழந்ததுபோல ஒருசிலரின் மோசடி நடவடிக்கைகளால் வேறு எந்தத் தாயும் தங்களின் பிள்ளைகளை இழந்துவிடக்கூடாது என்று கூறி கண்கலங்கினார்.

sepsis after hair transplant treatment

ஹேர் டிரான்ஸ்பிளான்ட் எனப்படும் முடி மாற்று சிகிச்சை சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது. இந்த சிகிச்சை முடி உதிர்வுக்கான கடைசி தீர்வாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக, பிரபலமான மருத்துவமனைகளில் மட்டுமே 'காஸ்மெட்டிக்' பிரிவு செயல்பட்டு வந்தது. தற்போது, பெரு நகரங்களில் மட்டுமின்றி சிறு நகரங்களில் கூட நவீன பியூட்டி பார்லர்களாக இந்த மையங்கள் புற்றீசல் போல் முளைக்கத் துவங்கிவிட்டன.  இந்த முடி மாற்று சிகிச்சைகள் செலவு அதிகமானவை. தவிர மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டியவை. இந்தச் சிகிச்சைகளில் அனுபவம் வாய்ந்த, தரமான மருத்துவமனைகளில் சிகிச்சைளை மேற்கொள்வது முக்கியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Post a Comment

Previous Post Next Post