முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் வகையில் தமிழக அரசு மனு.


முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் வகையில் நிலுவையில் உள்ள பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க கேரள மாநிலத்துக்கு உத்தரவிடக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றது. அந்த வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.


அதில், “முல்லைப் பெரியாறு அணையினை பலப்படுத்த தமிழக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 15 மரங்களை வெட்டவும், சாலைகள் அமைக்கவும் கேரள அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இது தொடர்பாக பலமுறை அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “எனவே பேபி அணையை பலப்படுத்துதல் பணிக்காக உபகரணஙகள் கொண்டு செல்ல சாலை அமைத்தல், 15 மரங்களை அகற்றல் உள்ளிட்டவற்றுக்கு ஒத்துழைக்க நீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post