மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய 9 இளைஞர்கள் கைது!

மகளிர் கல்லூரிக்குள் புகுந்து மாணவிகளிடம் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டு காவலரை தாக்கிய 9 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மதுரை மாநகர் நரிமேடு பகுதியில் உள்ள லேடி டோக் கல்லூரி வளாகத்திற்குள் கடந்த 30ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி நாளில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர் பூமி என்பவரை தாக்கி, இரு சக்கர வாகனத்தினை அவர் மீது ஏற்ற முயன்றனர். கல்லூரி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். இதனை வீடியாவாக பதிவுசெய்து சமூகவலைதளங்களிலும் பதிவிட்டு்ள்ளனர்.

இதனையடுத்து கல்லூரி கண்காணிப்பாளரான பூப்பாண்டி என்பவர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடிவந்தனர்.

இதையடுத்து மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய வழக்கில் திருப்புவனத்தை சேர்ந்த சூரியா, முத்துநவேஷ், கோ.புதூரை சேர்ந்த அருண்பாண்டியன், மணிகண்டன், சேதுபாண்டி, பா.மணிகண்டன், ஆத்திகுளம் முத்து விக்னேஷ், காந்திபுரம், வில்லியம் பிரான்சிஸ், காந்திபுரம் விமல்ஜாய் பேட்ரிக் ஆகிய 9 இளைஞர்களை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருகிறது. 

Post a Comment

Previous Post Next Post